
சிஎஸ்கேவின் புது கேப்டன்
அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயதாகும் தோனி இந்தாண்டுடன் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அடுத்தபடியாக அணியில் நீண்ட காலம் இருந்துள்ள ஜடேஜாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜடேஜா தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட பெருமையில் தற்போது இருப்பதாகவும், தோனி அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் காசி விஸ்வநாதன் விளக்கமளித்திருந்தார்.

ஜடேஜா கேப்டன்சி அனுபவம்
இப்படி தோனியின் நம்பிக்கையை சம்பாதித்த ஜடேஜாவுக்கு கேப்டன்சி அனுபவமும் இருந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு இந்திய அணி U19 உலகக்கோப்பையை வென்ற போது அணியின் கேப்டனாக செயல்பட்டவர் விராட் கோலி. அப்போது துணைக்கேப்டனாக இருந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர் ரவீந்திர ஜடேஜா. இதுமட்டுமல்லாமல் நேரடி கேப்டனாகவும் இருந்துள்ளார்.

அபார வெற்றி தந்துள்ளார்
கடந்த 2007ம் ஆண்டு இந்தியா, வங்கதேசம், இலங்கை என மூன்று அணிகள் மோதிய 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் வங்கதேசத்துடனான ஒரே ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணியை ரவீந்திர ஜடேஜா வழிநடத்தினார். 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார். ஆனால் இவை நடந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

டி20 கேப்டன்சி அனுபவம்
டி20 கிரிக்கெட்டில் ஜடேஜா கேப்டன்சி செய்தது இல்லை. ஆனால் மிகப்பெரிய அனுபவம் அவருக்கு உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் சிஎஸ்கேவில் தோனியுடன் வியூகங்களை வகுத்து வருகிறார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற கேப்டன்களுடனும் பணியாற்றிய அனுபவம் ஜடேஜாவுக்கு உள்ளதால், அவருக்கு பெரிய சவாலாக இருக்காது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











