
மும்பை அணிக்கு சிக்கல்
யுவேந்திர சாஹல் சமீபத்தில் ஒரு பரபரப்பை கிளப்பியிருந்தார். அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது, ஒரு சீனியர் வீரர் தன்னை 15வது மாடியில் இருந்து தள்ளிவிட முயன்றதாகவும், நூலிழையில் தப்பியதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் மும்பை அணி மீது ரசிகர்களின் கவனம் திரும்பியது.

உத்தப்பா புகார்
இந்நிலையில் சென்னை அணியில் முன்னணி வீரரான ராபின் உத்தப்பாவும் மும்பை அணி மீது குற்றம்சாட்டியுள்ளார். உத்தப்பா ஐபிஎல் தொடரில் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதில் முதன் முதலில் மும்பை அணிக்காக தான் கடந்த 2008ம் ஆண்டு ஆடினார். அப்போது தன்னை கட்டாயப்படுத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறியுள்ளார்.

என்னதான் நடந்தது
இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் முதன்முதலில் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்ட வீரர் நானாக தான் இருப்பேன். அந்த அணியில் இருந்து என்னை ஆர்சிபிக்கு மாறிக்கொள்ளுமாறு கேட்டனர். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் மும்பை அணியை சேர்ந்த ஒருவர் ( பெயர் சொல்ல விரும்பவில்லை ) நான் கையெழுத்திடவில்லை என்றால் மும்பை அணி ப்ளேயிங் 11ல் வாய்ப்பே தரமாட்டோம் என மிரட்டினார்.

விஸ்வாசமே இல்லை
இதன்பின்னர் மும்பை மீது எனக்கு இருந்த விஸ்வாசம் சுக்குநூறானது. இதனால் 2009ல் ஆர்சிபிக்காக என்னால் ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாட முடியவில்லை. மன அழுத்தத்திலேயே இருந்தேன். அதன் பின்னர் எனக்கான வாய்ப்புகள் பறிபோய்விடும் என்பதை புரிந்துக்கொண்டு மீண்டும் கம்பேக் கொடுத்தேன் எனக்கூறியுள்ளார். மும்பை அணி மீது இப்படி வீரர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதால் ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











