ஒருவருட மதிய உணவு இல்லை.. 80கிமீ தூரத்தில் கூலி வேலை.. யார் இந்த ‘அதிவேக புயல்’ குமார் கார்த்திகேயா?
மும்பை: மும்பை அணியின் புதிய எதிர்காலமாக மாறியுள்ள வேகப்பந்துவீச்சாளர் குமார் கார்த்திகேயாவின் கதை ரசிகர்கள் மனதை கலங்கவைத்துள்ளது.
ஐபிஎல்-ல் தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை அணி, கடைசியாக ராஜஸ்தான் அணியை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அறிமுக வீரர் தான்.
24 வயதாகும் குமார் கார்த்திகேயா ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

யார் அந்த வீரர்
தனது முதல் போட்டியிலேயே 4 ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அந்த ஒரு விக்கெட் ஆட்டத்தையே மாற்றிய சஞ்சு சாம்சனின் விக்கெட்டாகும். விக்கெட்கள் அதிகளவில் எடுக்கவில்லை என்றாலும், கார்த்திகேயாவின் பவுலிங்கை ராஜஸ்தான் அணியால் சமாளிக்கவே முடியவில்லை. அவரின் ஓவரில் தூக்கி அடித்தால் கேட்ச் ஆகும் என்ற பதற்றம் இருந்துக்கொண்டே இருந்தது. இதனால் ரசிகர்களிடையே அவர் தனிகவனம் பெற்றார்.

குமார் கார்த்திகேயா பயணம்
இந்நிலையில் குமார் கார்த்திகேயா குறித்து அவரது பயிற்சியாளர் பரத்வாஜ் பேசியுள்ளார். அதில், ஒரு போலீஸ் கான்ஸ்டெபுளின் மகன் தான் கார்த்திகே. கான்பூரில் இருந்து டெல்லிக்கு குடிப்பெயர்ந்த அவர், 15 வயதில் கிரிக்கெட் ஆட ஆசைப்பட்டார். ஆனால் குடும்பத்திற்கு பொருளாதார சிக்கல் கொடுக்கக்கூடாது என்பதற்காக பல அகாடமியில் இலவசமாக பயிற்சி பெற கேட்டார். கடைசியில் எனது அகாடமியில் நான் பயிற்சி கொடுத்தேன்.

80கிமீ பயணம்
அந்த வயதிலேயே குமார் கார்த்திகேயா கூலி வேலைக்கு சென்றார். பயிற்சி அகாடமியில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு தினமும் இரவு நேரத்தில் வேலைக்கு செல்வார். காலையில் பேருந்தில் வராமல் ஏதேனும் ஒரு வண்டியை பிடித்து வந்துவிடுவார். ஏனென்றால் அதில் ரு.10 சேமித்து பிஸ்கட் வாங்கி சாப்பிடுவார்.

உணவே எடுத்துக்கொள்ளவில்லை
கார்த்திகே நீண்ட பயணம் செய்கிறார் என்பதால், எனது அகாடமியில் சமையல்காரருடன் தங்கிக்கொள்ள கூறினேன். அந்த நேரத்தில் மதிய நேரத்தில் சமையல்காரர் உணவு வழங்கினால் கார்த்திகேயா அழத்தொடங்குவார். இப்படி ஒரு வருடமாக அவர் மதிய உணவே இல்லாமல் விளையாடியுள்ளார்.

இரண்டே வருடங்கள்
டெல்லி அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மத்திய பிரதேசத்தில் உள்ள எனது நண்பரிடம் அனுப்பி வைத்தேன். அங்கு தேர்வாகி 2 வருடங்களில் 50+ விக்கெட்களை குவித்து பெருமை பெற்றார். இப்படி கடின உழைப்பால் முன்னேறிய குமார் கார்த்திகேயாவுக்கு இன்று நல்ல இடம் கிடைத்துள்ளது என பயிற்சியாளர் பரத்வாஜ் பெருமைப்பட்டுள்ளார். இதே பரத்வாஜிடம் தான் கவுதம் கம்பீர், அமித் மிஸ்ரா ஆகியோர் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications