அகமதாபாத்: இம்பேக்ட் பிளேயர் விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறியுள்ளது. இன்னொரு பக்கம் மும்பை அணி எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அதேபோல் சிஎஸ்கே கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக பார்க்கப்படுவதால், ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அடுத்த சீசனில் மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் தோனியை பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு கடந்தப் போட்டியின் போது தோனி பதிலளித்தார். அதில், இதுகுறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் சில மாதங்கள் நேரம் இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் எடுக்க வேண்டிய முடிவை பற்றி யோசித்து, தலைவலியை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தோனி ஓய்வு பற்றி அவரின் நண்பரும், சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளரான பிராவோ பேசுகையில், 100 சதவிகிதம் தோனி நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார். ஏனென்றால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறை தோனியின் கரியரை நீட்டித்துள்ளது. அதேபோல் பேட்டிங்கில் கீழ் நிலையில் தான் தோனி வருகிறார்.
மிடில் ஆர்டரில் ரஹானே மற்றும் சிவம் துபே இருப்பதால், சென்னை அணியின் பேட்டிங் வலிமையடைந்துள்ளது. அதனால் தோனியிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அணி எப்போதெல்லாம் அழுத்தத்தில் இருக்கிறதோ, அப்போது தோனி இப்போதும் அமைதியாக சரியான வேலையை செய்கிறார் என்று தெரிவித்துள்ளார். பிராவோவின் வார்த்தைகளால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேபோல் பிராவோவின் பயிற்சியில் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதும் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.