கொல்கத்தா : ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணி கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் இம்முறை எப்படியும் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆர் சி பி அணிக்கு இம்முறை ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மனான ரஜத் பட்டிதார் காயம் காரணமாக விலகினார். இதேபோன்று தொடக்க ஆட்டக்காரர் வில்ஜாக்ஸ், வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டோப்லி ஆகியோரும் காயத்தால் விலகியுள்ளனர். எனினும் ஆர் சி பி அணி முதல் ஆட்டத்தில் மும்பை அணியை தங்களது சொந்த மண்ணில் எளிதாக வீழ்த்தியதால் அந்த அணி ரசிகர்கள் இம்முறை கோப்பை எங்களது தான் என்று மிதப்பில் சுற்றி திரிந்தார்கள்.

ஆனால் வழக்கம் போல் ஆர்சிபி அணி கணிக்க முடியாத படி இரண்டாவது ஆட்டத்திலேயே தோல்வியை தழுவியது. இந்த நிலையில் ஆர் சி பி அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி 23 ரன்களை கூடுதலாக எக்ஸ்ட்ராஸ்களாக கொடுத்துவிட்டது. ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு உதிரி ரன்களை கொடுக்கலாம்.
ஆனால் 23 என்பது மிகவும் அதிகம். இந்த 23 உதிரி ரன்களை ஆர்சிபி அணி கொடுக்காமல் விட்டிருந்தால். கொல்கத்தா அணியின் இலக்கு 179 என்ற வகையிலே இருந்திருக்கும். இதேபோன்று ஆர் சி பி அணி பேட்டிங்கில் திடீரென்று சரிந்தது. விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்திருந்த ஆர்சிபி 61 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. விராட் கோலி ஆட்டமிழந்த உடன் அடுத்தடுத்து வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.

இதில் யாராவது ஒருவர் கொஞ்சம் பொறுமை காத்து ஆடி இருந்தால் கூட ஆர்சிபி அணி இவ்வளவு பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருக்காது. இதேபோன்று ஆர்.சி.பி அணி வீரர்கள் சுழற் பந்துவீச்சை முறையாக எதிர்கொள்ளாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. கே கே ஆர் சுழல் பந்துவீச்சாளர்கள் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள்.
ஒரு ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழல் பந்துவீச்சாளர்கள் என்ற பெருமையை கேகேஆர் பெற்றுள்ளது. வருண் சக்கரவர்த்தி, சுயாஸ் சர்மா, சுனில் நரேன் ஆகியோரை கொஞ்சம் கவனத்துடன் எதிர் கொண்டு விக்கெட்டுகளை கொடுக்காமல் இருந்திருந்தால் ஆர் சி பி அணி வெற்றியின் அருகே சென்றிருக்கும்.

இதேபோன்று ஹர்சல் பட்டேலை தேவை இல்லாமல் நடு வரிசையில் இறக்கியதற்கு பதில் டேவிட் வில்லியை முன் வரிசையில் களம் இறக்க செய்திருக்கலாம். ஆனால் அவர் கடைசி கட்டத்தில் வந்து எதிர் முனையில் துணை இல்லாமல் தனி ஆளாக விளையாடினார். ஆர்சிபி அணி கொத்தாக விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவி இருக்கிறது.
17.4 ஓவர்களில் எல்லாம் அந்த அணி சுருண்டு விட்டது. குறைந்தபட்சம் 20 ஓவர் களை விளையாடி இருந்தால் கூட ரன் ரேட் பிரச்சனை வந்திருக்காது. கடந்த முறை பல போட்டிகளில் வென்று தந்த தினேஷ் கார்த்திக் இம்முறை ஃபார்மல் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.