அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி 41 வயதிலும் டைவ் அடித்து பந்தை பிடிக்க முயன்ற சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கிரிக்கெட்டுக்கு வயது முக்கியமல்ல உடல் தகுதியும் வைராக்கியமும் தான் முக்கியம் என்பதை தோனி உள்ளிட்ட வீரர்கள் அவ்வப்போது நிரூபித்து இருக்கிறார்கள்.
தோனி நேற்றைய ஆட்டத்தில் கேப்டனாக களமிறங்கியது மூலம் ஐபிஎல் தொடரில் வயதான கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். எனினும் இந்த காலத்து இளைஞர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தோனி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றைய ஆட்டத்தில் கூட ஒரு சம்பவம் நடைபெற்றது. குஜராத் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்டது. இதில் குஜராத்தின் வெற்றி உறுதியான நிலையிலும் கூட தோனி கடும் நெருக்கடியை குஜராத் வீரர்களுக்கு கொடுத்தார். ஆட்டத்தின் 18 புள்ளி இரண்டாவது ஓவரில் தீபக்சாகர் காலை குறி வைத்து பந்து இடது புறம் செல்லும் வகையில் வீசினார்.
ஆனால் அதனை பேட்ஸ்மேன் பின்னால் தட்டி விட இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தோனி பாய்ந்து டைவ் அடித்தார். எனினும் பந்து அவரை தாண்டி பவுண்டரிக்கு சென்றது. இதன் பிறகு தோனி உடனடியாக எழுந்து நிற்கவில்லை. தோனிக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் வலியில் அவதி அடைந்த தோனி மருத்துவரின் உதவியை நாடினார். இதை அடுத்து தோனி ஆட்டத்தில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசிவரை நின்று போட்டியை முடித்துக் கொண்ட பிறகு தான் தோனி பெவிலியன் சென்றார். இதனால் தோனி காயம் அடைந்து விட்டதாக ரசிகர்கள் கருதினர். எனினும் இது சாதாரண தசைப்பிடிப்பு தான் என்றும் அடுத்த போட்டியில் தோனி விளையாட சரியாகி விடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஒருவேளை தோனி விளையாடவில்லை என்றால் விக்கெட் கீப்பராக அம்பத்தி ராயுடு தான் செயல்படுவார். ஆனால் அதற்கு தேவை இருக்காது.