டெல்லி: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற 224 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடிய கான்வே 87 ரன்களும், ருதுராஜ் 79 ரன்களும் விளாசினர்,
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதேபோல் டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு, சக்காரியா சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை அணி சார்பாக கெய்க்வாட் - கான்வே கூட்டணி களமிறங்கியது. 2வது ஓவரிலேயே அதிரடியாக ருதுராஜ் ஒரு பவுண்டரியையும், கான்வே ஒரு சிக்சரையும் விளாச, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஓவருக்கும் 2 பவுண்டரிகளை கண்டிப்புடன் சென்னை அணியின் இரு பேட்ஸ்மேன்கள் விளாச தொடங்கினர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 52 ரன்கள் குவித்தது.
இதையடுத்து டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் இருவரும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர். பின்னர் அக்சர் படேல் வீசிய ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை பறக்கவிட்ட ருதுராஜ் கெய்க்வாட், 36 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதனைத் தொடர்ந்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்சர்களை அடிக்க, சென்னை அணி 12 ஓவர்கள் 117 ரன்களை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து கான்வே சிக்சர் விளாசி 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். நடப்பு சீசனில் கான்வேயின் 6வது அரைசதம் இதுவாகும்.
இதன்பின்னர் சென்னை அணியின் அதிரடி அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. ஆனால் சக்காரியா வீசிய பவுன்சர் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிவம் துபே களமிறங்கினார். 16வது ஓவரை வீச லலித் யாதவ் அழைக்கப்பட்ட, சிவம் துபே சிக்சர் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் கலீல் அஹ்மத் வீசிய 18வது ஓவரிலும் சிவம் துபே அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசினார்.
ஆனால் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவரும் ஆட்டமிழக்க, பின்னர் கான்வேயும் 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஃபினிஷிங் செய்யும் பொறுப்பை தோனி - ஜடேஜா எடுத்து கொண்டனர். 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் ஜடேஜா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியை விளாச, சென்னை அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. பின்னர் கடைசி ஓவரை வீச சக்காரியா அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் முதல் பந்தில் தோனி ஒரு ரன் எடுத்து எதிர்முனைக்கு செல்ல, ஜடேஜா அடுத்தடுத்து இரு அற்புதமான பவுண்டரிகளை விளாசினார். பின்னர் கடைசி பந்து மட்டுமே தோனிக்கு கிடைத்தது. அதில் 2 ரன்கள் சேர்க்கப்பட, பின்னர் மூன்றாம் நடுவரால் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் தோனி ஸ்ட்ரைக்கில் இருக்க, மைதானத்தில் தோனி.. தோனி.. என்ற கோஷம் உச்சத்திற்கு சென்றது. பின்னர் அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட, சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் சேர்த்தது.