ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு பின் ஜெய்ஸ்வால் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி சார்பாக ஜோ ரூட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இதனால் இம்பேக்ட் பிளேயராக போல்ட் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் அணி சார்பாக வழக்கம் போல் ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் பட்லர் நிதானம் காட்ட, தொடக்கம் முதலே ஜெய்ஸ்வால் பட்டாசாய் வெடித்தார். மார்கோ யான்சன் வீசிய 2வது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் சிக்சரை விளாசி மிரட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால், 18 பந்துகளில் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இன்றையப் போட்டியில் 35 ரன்கள் சேர்த்தன் மூலம் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். 34 போட்டிகளில் ஆயிரம் ரன்களை விளாசியதோடு, ஜெய்ஸ்வால் 145.66 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார். இதுதான் ஜெய்ஸ்வால் ஆட்டம் மீது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
21 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் விரைவில் இந்திய அணிக்காக களமிறங்குவார் என்று ரோகித் சர்மாவே பாராட்டி இருந்தார். தற்போது அடுத்தடுத்து ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் அசத்தி வருவது அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் குவித்த வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.
31 இன்னிங்ஸ்களில் இருவரும் ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளனர். அதேபோல் சென்னை அணியின் ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா 34 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். தற்போது ஜெய்ஸ்வாலும் 34 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை குவித்ததன் மூலம் சுரேஷ் ரெய்னாவுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.