கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் நிம்மதியாக இருப்பதாக லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 17 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 24ஆம் தேதி நடக்கவுள்ள எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேப்டன் கேஎல் ராகுல் காயத்தால் விலகிய போதும், கேப்டன் பொறுப்பை ஏற்ற க்ருனால் பாண்டியா சாதித்து காட்டியுள்ளார்.

வெற்றிக்கு பின் க்ருனால் பாண்டியா பேசுகையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருப்பது மிகவும் நிம்மதியாக உள்ளது. நாங்கள் கடைசி வரை போராடினோம். இந்தப் போட்டியின் வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே காரணம். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 61 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து விளையாடி வந்தது. ஆனால் 2 நல்ல ஓவர்கள் எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. ஸ்பின்னர்களுக்கு பந்தை நன்றாக க்ரிப் செய்ய முடிந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் ரொம்பவே ஸ்பெஷல். அவர் களத்தில் இருந்தால், நாம் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இன்று மீண்டும் அவரால் என்ன செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார். டெத் ஓவர்களில் திட்டமிட்டு அதனை செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு பந்துக்கும் நான் பந்துவீச்சாளர்களுடன் பேசினேன். அவர்களின் திட்டம் அறிந்து, சரியாக செயல்படுத்த மட்டுமே அறிவுறுத்தினேன்.
ஆனால் நன்றாக வீசப்பட்ட பந்தையும் பேட்ஸ்மேன் சிக்சர் அடித்தால் நாம் எதுவும் சொல்ல முடியாது. கடைசி ஓவரை யாஷ் தாக்கூருக்கு கொடுக்க உள்ளுணர்வே காரணம். கடந்த போட்டியில் பந்து திடீரென ரிவர்ஸ் ஆனது. இதனால் நான் மோசின் கானிடம் கடைசி ஓவரை கொடுத்தேன். ஆனால் இன்று யாஷ் தாக்கூருக்கு கொடுக்க ஆடுகளத்தின் தன்மையே காரணம். அதேபோல் யாஷ் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி இருந்ததால், அவரும் உறுதியுடன் இருந்தார் என்று தெரிவித்தார்.