சென்னை: நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்னை அணி கேப்டன் தோனி ஆட்டத்தை நிறுத்த நடுவர்கள் அனுமதித்தது சரியான அணுகுமுறையல்ல என்று ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்த நிலையில், குஜராத் அணி 20 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்த போட்டியின் இடையே நடுவரின் முடிவை ஏற்காமல், சிஎஸ்கே கேப்டன் தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

16வது ஓவரை வீச பதிராணாவை தோனி அழைத்த போது, நடுவர்கள் தடுத்தனர். இதற்கு பதிராணா 9 நிமிடங்களில் மைதானத்தில் இருந்து வெளியில் அமர்ந்திருக்கிறார். விதிகளின்படி 8 நிமிடங்கள் மட்டுமே வீரர்கள் வெளியில் அமர அனுமதிக்கப்படுவார்கள். பதிராணா கூடுதலாக ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டதால், பதிராணாவுக்கு பதிலாக வேறு பந்துவீச்சாளர்களை பயன்படுத்த நடுவர்கள் தரப்பில் தோனிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தோனி பதிராணாவை பந்துவீச வைக்க வேண்டும் என்பதற்காக நடுவர்களுடன் வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் சிஎஸ்கே வீரர்களுடன் சேர்ந்துகொள்ள நடுவர்கள் என்ன செய்வதென தெரியாமல் சிரித்துக் கொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் வாக்குவாதத்தில் செல்ல, பதிராணா களத்தில் முழுமையாக 9 நிமிடங்களை கடந்தார். இதையடுத்து பதிராணா பந்துவீச எந்த தடையில் இல்லாமல் போனது.

நடுவரின் முடிவை ஏற்காமல் சென்னை அணியின் கேப்டன் தோனியே வாக்குவாதத்தில் ஈடுபட்டது முன்னாள் வீரர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது ட்விட்டர் பக்கத்தில், கேப்டன் தோனி சுமார் 4 நிமிடங்களுக்கும் மேலாக நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பதிராணா பந்துவீச அனுமதிப்பதற்கான நேரத்தை கடக்க சரியாக இருந்தது.
இந்த விவகாரத்தில் முழு கட்டுப்பாட்டையும் நடுவர்கள் வைத்துக் கொள்ளாமல், தோனியுடன் சிரித்து கொண்டிருந்தது சரியான நடவடிக்கையல்ல என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் சுனில் கவாஸ்கர் பேசுகையில், அதிக பிரஷர் இருக்கும் சூழல்களில் நடுவரின் முடிவு தவறாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டதை விமர்சித்துள்ளார்.