ஜெய்ப்பூர்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் சஞ்சு சாம்சன் செய்த தவறு காரணமாகவே ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 217 ரன்கள் குவித்தது அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சந்தீப் சர்மா வீசிய நோ-பால் காரணமாக ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.

ஆனால் ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு சந்தீப் சர்மா வீசிய நோ-பால் கடந்து கேப்டன் சஞ்சு சாம்சன் எடுத்த தவறான முடிவுகளும் காரணமாக அமைந்துள்ளது. 18வது ஓவரை வீசிய சாஹல், மார்க்ரம் மற்றும் த்ரிப்பாட்டியின் விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மிரட்டினார். அப்போதே ராஜஸ்தான் அணியின் கைகளுக்குள் ஆட்டம் வந்துவிட்டதாக ரசிகர்கள் கணித்தனர்.
ஆனால் சஞ்சு சாம்சன் எடுத்த ஒரேயொரு முடிவு ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றியது. கடைசி ஓவர் சந்தீப் சர்மாவுக்கு என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீசுவதற்கு அனுபவ வீரரை பயன்படுத்தி இருக்க வேண்டும். அனுபவ வீரர் தேவை என்ற காரணத்தினாலேயே மெக்காயை இம்பேக்ட் பிளேயராக ராஜஸ்தான் அணி கொண்டு வந்தது. அவர் வெறும் 1 ஒவர் வீசி இருந்த நிலையில், 19வது ஓவரை வீச மெக்காய் அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சஞ்சு சாம்சனோ அனுபவ வீரரிடம் செல்லாமல், இளம் வீரரான குல்தீப் யாதவிடம் சென்றார். திடீரென பிரஷர் சூழலில் குல்தீப் யாதவ் பந்துவீச அழைக்கப்பட்டதால், அவரால் யார்க்கர் பந்துகளை சரியாக வீச முடியவில்லை. அந்த ஓவரில் மட்டும் கிளென் பிலிப்ஸ் ஹாட்ரிக் சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். அந்த ஓவரில் மொத்தமாக 24 ரன்கள் விளாசப்பட்டதாலேயே, ஐதராபாத் அணிக்கு வெற்றிபெறுவதற்கான உத்வேகம் கிடைத்தது.
ஏற்கனவே மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதும் சஞ்சு சாம்சனின் கேப்டன்சி தவறால் ராஜஸ்தான் அணி தோல்வியை சந்தித்திருந்தது. பவுலிங்கில் சிறந்த வீரர்களை கொண்டு ராஜஸ்தான் அணி, பவுலர்களை பயன்படுத்தும் விதத்தில் சொதப்பி வருகிறது. கேப்டன் சஞ்சு சாம்சனின் முடிவால் அந்த அணி தோல்வியடைவது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.