சென்னை: எம்ஜிஆர், ரஜினிகாந்த் மாதிரியான சூப்பர் ஹீரோக்களை கொண்டாடி தீர்த்து வரும் சென்னை நகரம், தோனியையும் அப்படியொரு சூப்பர்ஹீரோவாகத் தான் பார்ப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்றுடன் தொடங்கவுள்ள நிலையில், குவாலிஃபையர் முதல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால், நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

அதேபோல் தோனி தலைமையில் சென்னை அணி கடைசி முறையாக பிளே ஆப் சுற்றில் ஆடவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தோனியின் கடைசி சீசன் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறியுள்ளதால், அவரின் ஆட்டத்தை காணவே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே பேசுகையில், சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியின் போது தோனி பேட்டிங்கை செய்வதை பார்க்கவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி வருகின்றனர். எப்படி தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ரஜினிகாந்த் மாதிரியான சூப்பர் ஹீரோக்களை கொண்டாடி தீர்க்கின்ற நகரம், தோனியையும் அப்படியொரு சூப்பர்ஹீரோவாகத் தான் பார்க்கிறார்கள்.

சென்னை அணிக்காக தோனி 7 அல்லது 8வது இடத்தில் தான் விளையாடப் போகிறார் என்பது தோனிக்கும், ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும். இருப்பினும் தோனி கிளவுஸ் மாட்டுவதை கேமராவில் காட்டினாலே போதும் என்று மைதானமே ஆர்ப்பரிக்கிறது. 41 வயது அல்ல, தோனிக்கும் இன்னும் 75 வயது ஆனாலும் இந்த ரசிகர்கள் அவரை ஓய்வுபெற விடமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, ராஜஸ்தான், மும்பை, டெல்லி என்று பல்வேறு மைதானங்களிலும் விளையாடினார். தோனியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியில் மைதானத்தில் குவிந்தனர். ஒவ்வொரு முறையும் தோனியை பார்க்கவும் ரசிக்கவும் குவிந்த கூட்டத்தால் எதிரணி வீரர்களும் கூட ஆச்சரியமடைந்தனர்.
அதேபோல் பல்வேறு அணிகளும் சேப்பாக்கத்தில் விளையாடிய போது, தோனிக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் சென்னை அணி ரசிகர்கள் மத்தியிலும், தோனியின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது