சென்னை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி களமிறங்க உள்ளது. சொந்த மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாட உள்ளது. எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக அடைந்த தோல்வி காரணமாக புள்ளிப் பட்டியலின் முதலிடத்தில் இருந்து கீழ் இறங்கியது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் உள்ளது. கடந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளதால், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது. இதுவரை இந்த இரு அணிகளுக்கு இடையில் 27 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 15 போட்டிகளில் சென்னை அணியும், 12 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வென்றுள்ளன.
சென்னை அணியை பொறுத்தவரை 9வது வீரர் வரை பேட்டிங் செய்யும் திறன் இருப்பதால், நீண்ட பேட்டிங் வரிசையே பலமாக அமைந்துள்ளது. இன்னும் ஜடேஜா மற்றும் ராயுடு மட்டுமே ஃபார்முக்கு திரும்ப வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல் ஜடேஜாவுக்கு முன்பாக தோனி களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பந்துவீச்சில் இளம் வீரர் ஆகாஷ் சிங் மற்றும் பதிரானாவுக்கு கடந்த போட்டி சரியாக அமையவில்லை.
அதனை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் மாற்றுவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சஹர் இருவரும் காயத்தில் இருந்து குணமடையாததால், இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் பஞ்சாப் அணியை பொறுத்தவரை எந்த பிட்ச்சாக இருந்தாலும், எளிதாக 200 ரன்களை குவிக்கும் வல்லமை கொண்ட அணியாக உள்ளது. சாம் கரண், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார்கள்.
ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று ஸ்பின்னர்களுடன் பஞ்சாப் அணி களமிறங்கவில்லை என்றால், சென்னை அணியை பற்றி வீழ்த்துவதை மறந்துவிட வேண்டியது தான். ஆனால் பஞ்சாப் அணியில் ராகுல் சஹர், சிக்கந்தர் ராசா மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் ஸ்பின்னர்களாக உள்ளனர். இதில் ராகுல் சஹர், சிக்கந்தர் ராசா மட்டுமே விக்கெட் வீழ்த்தும் வல்லமை கொண்டவர்கள். இதனால் இன்னொரு ஸ்பின்னராக யாரை பஞ்சாப் அணி களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.