பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்களில் முதலிடத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி இருந்து வருகிறார். அதேபோல் ஆர்சிபி அணியின் கோட்டையான சின்னசாமி மைதானத்தில் தோனியின் சராசரி 92.6ஆக உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் தென்னிந்தியாவின் மிக முக்கிய அணிகளாக உள்ள சென்னை - பெங்களூரு இடையிலான ஆட்டம் இன்று இரவு நடக்கவுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை எடுத்து புள்ளிப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதனால் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவதற்கான போட்டியாக இன்றையப் போட்டி அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தை தனது ஆட்டத்தின் மூலம் ஆர்சிபி அணியின் கோட்டையாகவே மாற்றி வருகிறார் விராட் கோலி. பெங்களூரு மண்ணில் ஆடிய மூன்று போட்டிகளில் அரைசதம் விளாசி மிரட்டி வருகிறார். ஆனால் இன்றையப் போட்டியில் சென்னை அணி களமிறங்குவதால் சின்னசாமி மைதானம் யாரின் கோட்டை என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் சின்னசாமி மைதானத்தில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி 5 அரைசதங்கள் உட்பட 463 ரன்களை விளாசியுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிராக 31 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 838 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் ஆர்சிபி அணிக்கு எதிராக அதிக ரன்களை விளாசியுள்ள இந்திய வீரர் என்ற சாதனையும் தோனியின் வசமே உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணிக்கு எதிராக களமிறங்கும் போது, தோனியின் ஆட்டம் கூடுதல் அதிரடியாக இருக்கும்.

அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 41 வயதிலும் அசாத்திய ஃபார்மில் உள்ள தோனி, அந்த அணியின் பந்துவீச்சாளர்களை நாலாப்பக்கமும் சிதறடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சின்னசாமி மைதானம் என்றாலும், தல தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்பதால் ஆர்சிபி ரசிகர்களுக்கு இணையாக சென்னை அணியின் ரசிகர்களும் நிச்சயம் குவிந்துவிடுவார்கள். ஏற்கனவே டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே மொத்தமாக விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.