சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை அணி மலிங்கா போன்ற பந்துவீச்சாளர்களை அதிகமாக மிஸ் செய்ததாகவும், அதற்கு மருந்தாக இளம் வீரர் பதிரானா வந்திருப்பதாகவும் சிஎஸ்கே ஜாம்பவான் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணி மீது மும்பை அணி அதிக ஆதிக்கம் செலுத்தியதற்கு மிக முக்கிய காரணம் லசித் மலிங்கா. 2013 ஐபிஎல் இறுதிப்போட்டி, 2015 ஐபிஎல் இறுதிப்போட்டி, 2019ஆம் ஆண்டு இறுதிப்போட்டி ஆகியவற்றில் சென்னை அணி மும்பையிடம் தோல்வியடைந்ததற்கு மலிங்கா தான் முக்கிய காரணம். அவரது யார்க்கர்கள், ஸ்லோ பால்கள் ஆகியவற்றை கணிக்க முடியாமல் தோனியே திணறியுள்ளார்.

இதனை பலமுறை சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியே தெரிவித்துள்ளார். மலிங்காவால் சென்னை அணி அடைந்த தோல்விகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதற்கு மருந்து போடுவது போல் "குட்டி மலிங்கா" பதிரானாவை சென்னை அணி மிக இளைய வயதிலேயே கண்டறிந்து ஒப்பந்தம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பதிரானாவை தோனி மிகவும் ஸ்பெஷலாக பார்த்துக் கொள்வது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பதிரானா வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்தப் போட்டியில் பதிரானா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவருக்கான விருதை சென்னை அணியின் ஜாம்பவான் வீரர் சுரேஷ் ரெய்னா வழங்கி பாராட்டினார்.

இதையடுத்து பதிரானா குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், பதிரானாவின் பந்துவீச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மும்பை அணிக்காக ஆடிய ஜாம்பவான் வீரர் மலிங்காவை சென்னை அணி அதிகமாக மிஸ் செய்தது. அவரால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். ஆனால் இப்போது சென்னை அணிக்கு பதிரானா கிடைத்துள்ளார். அவரின் யார்க்கர் பந்துகள் மிரட்டலாக உள்ளது. அவர் கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.