சென்னை: குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 1 போட்டியில் சென்னை அணி தரப்பில் சான்ட்னர் களமிறக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையிலான பிளே ஆப் சுற்றின் முதல் குவாலிஃபயர் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்பதால், எப்படியாவது சென்னை அணி வெற்றிபெற வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எந்த வீரர் மோசமாக செயல்பட்டாலும், தோனி வாய்ப்பு கொடுத்து அவர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்கிறார். தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, மொயின் அலி, ஜடேஜா, ரஹானே என்று அந்த பட்டியலில் நீண்ட கொண்டே செல்லும்.
ஆனால் சென்னை அணியில் உள்ள தீக்சனா மற்றும் ராயுடு மட்டுமே இதுவரை தங்கள் திறமைக்கு நியாயம் செய்யாமல் உள்ளனர். ராயுடுவை கூட இம்பேக்ட் பிளேயராக மட்டுமே பயன்படுத்துவதால், தீக்சனாவின் கள செயல்பாடுகள் சென்னை அணி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தீக்சனாவுக்கு பதிலாக பெஞ்ச் செய்யப்பட்டுள்ள வீரர் சான்ட்னர்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தவர். எந்த மைதானம் என்றாலும், கட்டுக்கோப்பாக வீசுவதுடன் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர். தீக்சனா வருவதற்கு முன் சான்ட்னர் சென்னை அணிக்காக சிறப்பாக ஆடிய நிலையில், தீக்சனா வந்தபின் பெஞ்ச் செய்யப்பட்டார். தீக்சனா அபார திறமையை கொண்டிருந்தாலும், நடப்பு சீசனில் பெரிதாக செயல்படவில்லை.
இதனால் இன்றையப் போட்டியிலாவது தீக்சனாவுக்கு பதிலாக சான்ட்னர் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் இன்னும் சில ரசிகர்கள் தல தோனிக்கு, தீக்சனாவை நீக்கிவிட்டு சான்ட்னரை களமிறக்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை முழுமையாக அறிந்த சான்ட்னர் களமிறங்கினால், குஜராத் அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.