சென்னை: குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் முதல் போட்டியில் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் மொத்தமாக 34 டாட் பால்களை விளையாடியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. குவாலிஃபையர் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

இதனிடையே இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக பிளே ஆப் சுற்றில் ஒவ்வொரு அணியால் ஆடப்படும் ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 செடிகள் நடப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி ஸ்கோர்போர்டில் கூட, 0 என்று எழுதுவதற்கு மரத்தின் சின்னத்தை ஒளிபரப்பி ரசிகர்களுக்கு வித்தியாசமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் மொத்தமாக 34 டாட் பால்களை விளையாடியுள்ளனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 34 பந்துகளில் வெறும் 20 ரன்களை விளாசி இருந்தால் கூட, சென்னை அணி 192 ரன்களை குவித்திருக்க முடியும். ஆனால் டாட் பால்களை பற்றி கவலைப்படாததன் விளைவால், சென்னை அணி சிக்கலில் சிக்கியுள்ளது.
பிசிசிஐ-யால் செடிகள் நடப்படும் என்ற அறிவிப்பை அறிந்த ரசிகர்கள், சென்னை அணி விளையாடியுள்ள டாட் பால்களால் ஒரு காடையே உருவாக்கிவிடலாம் என்று கிண்டல் செய்து வருகின்றனர். குஜராத் அணி சார்பாக ஷமி 10 டாட் பால்களையும், நலக்கண்டே 9 டாட் பால்களையும் வீசியுள்ளனர். அதேபோல் சென்னை அணி 34 டாட் பால்களை ஆடியதால், பிசிசிஐ சார்பாக 34 ஆயிரம் செடிகள் நடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.