லக்னோ: கடந்த சில போட்டிகளாக சென்னை அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் தீக்சனா சொதப்பி வந்த நிலையில், இன்றையப் போட்டியின் மூலம் கேப்டன் தோனி வைத்த நம்பிக்கையை காப்பாற்றி தீக்சனா அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பங்கேற்கவில்லை. இதனால் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பை க்ருனால் பாண்டியா ஏற்றுள்ளார். இதனிடையே மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணி சார்பாக ஆகாஷ் சிங் நீக்கப்பட்டு, தீபக் சஹர் சேர்க்கப்பட்டார். லக்னோ மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், பலரும் சான்ட்னருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பேசி வந்தனர்.
ஏனென்றால் இளம் வீரரான தீக்சனா விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பதோடு, ஃபீல்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் தீக்சனாவை நீக்கிவிட்டு, அவரது இடத்தில் சான்ட்னரை கொண்டு வர வேண்டும் என்று பேசி வந்தனர். ஆனால் தோனி தீக்சனா மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தோனி வாய்ப்பு கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து லக்னோ பேட்டிங்கின் போது 6வது ஓவரை வீசுவதற்காக தீக்சனா அழைக்கப்பட்டார். அப்ப்போது களத்தில் இருந்த மனன் வோராவை 10 ரன்களிலும், கேப்டன் க்ருனால் பாண்டியாவை டக் அவுட்டிலும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி மிரட்டினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
தீக்சனா ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், லக்னோ அணியின் திட்டமும் மாற்றப்பட்டது. சென்னை அணியின் ஸ்பின்னர்களும் அடுத்தடுத்து நம்பிக்கையுடன் அட்டாக் செய்தனர். இதன் மூலம் லக்னோ அணி 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கேப்டனாக தோனி எந்தவொரு வீரருக்கும் அதிக வாய்ப்புகளை வழங்கியே முடிவை எடுப்பார். அப்படி, தீக்சனாவுக்கு தொடர் வாய்ப்ப்புகளை வழங்கி அவரின் சிறந்த ஃபார்மை கொண்டு வந்துள்ளார். இதனால் ரசிகர்கள் கேப்டன் எம்எஸ் தோனியை பாராட்டி வருகின்றனர்.