சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தங்களது கடைசி லீகாட்டத்தில் விளையாட உள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 7 லீக் போட்டியில் விளையாடும். இம்முறை ஆறு லீக் ஆட்டத்தில் விளையாடி உள்ள சிஎஸ்கே அணி நான்கில் வெற்றி இரண்டில் தோல்வியை தழுவி இருக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் லீக் சுற்றில் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என சிஎஸ்கே அணி நினைக்கிறது. தற்போது 12 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் உடன் சிஎஸ்கே அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டத்தில் ஒரு போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று உறுதியாகிவிடும்.
இதனால் கே கே ஆர் அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் கொல்கத்தா அணியிலும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக 37 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள்.
சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். இந்த பட்டியலில் முதலிடத்தில் ராஜஸ்தான் இருக்கிறார்கள். இதனால் எந்த அணி சிறப்பாக பேட்டிங் செய்கிறதோ அவர்கள் தான் நாளை ஆட்டத்தில் வெற்றி பெறுவார்கள். கே கே ஆர் அணியில் ஜேசன் ராய், குர்பாஷ், நிதிஷ் ரானா, ரிங்கு சிங், ரசில் ஆகியோர் அபாயகரமான வீரர்களாக இருப்பார்கள்.
சிஎஸ்கே அணியில் ருதுராஜ், கான்வே ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மோயின் அலியும், ரகானேவும் சிஎஸ்கே பேட்டிங்கிற்கு ரன் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தோனி நாளைய ஆட்டத்திலும் எந்த மாற்றமும் செய்ய மாட்டார் என கருதப்படுகிறது.