பெங்களூரு: நடப்பு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்டன் டேவிட் வார்னர், இதுவரை ஒரு சிக்சர் கூட அடிக்காதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 5வது தோல்வியை பெற்றுள்ளது. இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாததால், அந்த அணி மீதான அழுத்தம் கூடிக் கொண்டே செல்கிறது. வழக்கம் போல் தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் மோசமான ஃபார்ம், மிட்செல் மார்ஷின் பொறுப்பில்லாத ஆட்டம், இளம் வீரர்களின் சொதப்பல் ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதுவொரு பக்கம் இருக்க டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஒவ்வொரு போட்டிக்கும் குறைந்தது 50 பந்துகள் வரை விளையாடும் டேவிட் வார்னர், அரைசதம் அடித்து ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் ஆட்டமிழந்து வந்தார். மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடாத நிலையில், டேவிட் வார்னர் மட்டும் அரைசதம் அடித்து வந்ததால், ரசிகர்கள் அவரை பெரியளவில் விமர்சிக்கவில்லை.
5 போட்டிகளில் விளையாடிய டேவிட் வார்னர் 228 ரன்கள் விளாசி ஆரஞ்ச் கேப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், டேவிட் வார்னர் இதுவரை ஒரு சிக்சரை கூட அடிக்கவில்லை. முதல் 4 போட்டிகளில் சிக்சர் அடிக்காததால், பெங்களூரு சின்னசாமி மைதானத்திலாவது சிக்சர் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் சின்னசாமி மைதானத்தின் சிக்சர் எல்லை 65 மீட்டர் தூரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும்.
பேட்ஸ்மேன்கள் சொர்க்கமாக திகழும் பெங்களூரு மைதானத்திலாவது டேவிட் வார்னர் சிக்சர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு கூட டேவிட் வார்னர் சிக்சர் அடிக்கவில்லை. ஒரு அணியின் கேப்டன் என்பதோடு, தொடக்க வீரராக பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆட வேண்டிய நிலையில் வார்னர் இருக்கிறார். இருப்பினும் இதுவரை ஒரு சிக்சரை கூட அடிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் 115 ஸ்ட்ரைக் ரேட்டிலேயே டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது, டெல்லி அணிக்கு எந்த விஷயத்திலும் உதவாது என்று குரல்கள் எழுந்துள்ளன.