சென்னை: குஜராத் அணியின் முக்கிய வீரர்களுக்கு எதிரான சென்னை அணியின் தீபக் சஹர், ரஹானே மற்றும் ஜடேஜாவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட உள்ளது. இதுவரை இந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ள 3 போட்டிகளில், அனைத்திலும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும் குவாலிஃபயர் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால், சென்னை அணி ரசிகர்கள் சிறிய நம்பிக்கையுடன் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கடைசி லீக் போட்டியில் கூட எந்தவொரு முக்கிய வீரருக்கும் ரெஸ்ட் கொடுக்காமல் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை களமிறக்கினார். இதன் மூலமாகவே குஜராத் அணி எந்தவிதமான ஆட்டத்தை ஆடும் என்று தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் சென்னை அணிக்காக நீண்ட காலம் ஆடிய மோகித் சர்மா, பயிற்சியாளர் நெஹ்ரா, சேப்பாக்கம் மைதானத்தில் தமிழ்நாடு அணிக்காக ஆடி வரும் சாய் கிஷோர், சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் குஜராத் அணியில் உள்ளனர்.
இதனால் சேப்பாக்கம் பிட்சில் ஏற்படப்போகும் மாற்றங்களை குஜராத் அணி நிச்சயமாக அறிந்து வைத்திருக்கும். ஆனால் குஜராத் அணியின் வெற்றி சுப்மன் கில், முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிக முக்கிய காரணமான அமைந்துள்ளனர். அவர்களை சிஎஸ்கே வீரர்கள் கடந்த காலங்களில் சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளனர். நடப்பு சீசனில் பவர் பிளே ஓவர்களில் மட்டும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமி பந்துவீச்சில் ரஹானே ஆட்டமிழந்ததே இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல் கடந்த 3 போட்டிகளாக பவர் பிளே ஓவர்களில் சென்னை அணிக்காக சம்பவம் செய்துவரும் தீபக் சஹர், குஜராத் அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில்லை இரு முறை வீழ்த்தி அசத்தியுள்ளார். தீபக் சஹர் பந்துவீச்சில் கில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஜடேஜாவின் சுழலுக்கு ஏராளமான முறை சிக்கியுள்ளார். இதனால் குஜராத் அணியின் முதுகெழும்பாக உள்ள வீரர்களை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.