அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியனாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றுள்ள மூன்று போட்டிகளும் சேஸிங் போது வந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தால், நிர்ணயித்த இலக்கை டிஃபெண்ட் செய்ய திணறி வருவதும் தெரிய வந்துள்ளது.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரசிகர்களால் கணிக்க முடியாத அளவிற்கு சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் கடைசி ஓவர் வரை சென்று, த்ரில்லிங்காகவே முடிவு எட்டப்படுகிறது. இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. கடைசி 10 ஓவர்களில் 126 ரன்களை விளாசி, ராஜஸ்தான் குஜராத் பவுலர்களை வேட்டையாடியது என்றே கூறும் அளவிற்கு ஆடினார்கள்.
ரஷித் கானை அட்டாக் செய்த சஞ்சு சாம்சன், ஷமி பந்தில் ஜுரல் அடித்த சிக்சர், அஸ்வினின் மரண மாஸ் கேமியோ, ஹெட்மயரின் அதிரடியான அரைசதம் என்று ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியும் இணைந்து வெற்றியை பெற்றுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வீழ்த்த ஏராளமான அணிகளுக்கு திட்டம் போட்டு கொடுத்துள்ளார்கள் என்றே கூறலாம்.
நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா டாஸ் தோற்ற போது, எங்களுக்கு டாஸ் பற்றி கவலையில்லை. முதலில் பேட்டிங் செய்தாலும் சரி, பந்துவீசினாலும் சரிதான் என்று மிக எளிதாக சாதாரணமாக இருந்தார். இதனால் ஹர்திக் பாண்டியா, கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ஸ் போல் பேசுவதாக ரசிகர்கள் விமர்சித்தனர். ஆனால் குஜராத் அணியின் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி ஆடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வியை அடைந்துள்ளது. அந்த மூன்று வெற்றியும், சேஸிங்கின் போது மட்டுமே வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முதலில் பேட்டிங் ஆடிய இரு போட்டிகளிலும் குஜராத் அணி தோல்வியையே சந்தித்துள்ளது. இதன் மூலம் குஜராத் அணி பந்துவீச்சாளர்களுக்கு இலக்கை டிஃபெண்ட் செய்வதில் பிரச்சனை இருப்பது தெரிய வந்துள்ளது.
பவர் பிளே ஓவர்கள் கடந்தால் ஷமியும், ரஷித் கானை அட்டாக் செய்தால் மற்ற பந்துவீச்சாளர்களும் சொதப்புவது எதிரணிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் அணி இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே 200 ரன்களை அடித்துள்ளது. சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்ததால், அவர்கள் மூலம் எளிதாக டிஃபெண்ட் செய்ததோடு, 180 ரன்கள இலக்கு வரை எளிதாகவும் சேஸிங் செய்தது. இதனால் குஜராத் அணியின் பவுலிங் பிரச்சனைகளை சரி செய்யவில்லை என்றால், நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் செல்வதே சிரமம் என்ற நிலை உருவாகியுள்ளது.