லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட உள்ளது. இரு அணிகளும் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள், 4 தோல்விகளுடன் உள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்பதோடு, பிளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாக்கி கொள்ளும்.
இதற்கான இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். லக்னோ பிட்ச்சை பொறுத்தவரை சேப்பாக்கம் மைதானத்தை போலவே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மைதானத்தில் ஒரு பக்கம் 61 மீ தூரமும், இன்னொரு பக்கம் 75 மீ தூரமும் பவுண்டரி எல்லை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் குறைந்த அளவு கொண்ட பவுண்டரி எல்லையை இரு அணிகளும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடும். இந்த நிலையில் லக்னோவில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கடந்த சில மணி நேரமாக தூரல் பெய்து வரும் சூழலில், டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்கு பின் டாஸ் போடப்பட்டது. கேஎல்ராகுல் காயம் காரணமாக வெளியேறியதால், க்ருனால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணி சார்பாக காயத்தில் இருந்து தீபக் சஹர் மீண்டு வந்துள்ளார். இதனால் ஆகாஷ் சிங் நீக்கப்பட்டு, தீபக் சஹர் சேர்க்கப்பட்டுள்ளார். லக்னோ அணி சார்பாக கேஎல் ராகுலுக்கு பதிலாக மனன் வோரா மற்றும் கரண் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, மொயின் அலி, ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹர், பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா
லக்னோ அணி விவரம்: மனன் வோரா, கைல் மேயர்ஸ், ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா, கரண் சர்மா, நிக்கோலஸ் பூரன், பதோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னாய், மோசின் கான்