லக்னோ: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக களமிறங்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ள நிலையில், க்ருனால் பாண்டியா கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட உள்ளது. இரு அணிகளும் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள், 4 தோல்விகளுடன் உள்ளது. இதனால் இன்றையப் போட்டியில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்பதோடு, பிளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாக்கி கொள்ளும். இதற்கான இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

லக்னோ மைதானம் ஸ்லோர் பிட்ச் என்பதால், பெரும்பாலும் லோ ஸ்கோரிங் ஆட்டமாகவே இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே லோ ஸ்கோரிங் ஆட்டங்களில் சிறப்பாக ஆடும் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக இன்றையப் போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான கடந்த போட்டியிலேயே கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன் ஓட முடியாமல் தவித்தார்.
இந்த நிலையில் கேஎல் ராகுலின் காலில் ஸ்கேன் எடுத்த பின்னரே, காயம் பற்றி முழு விவரம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேஎல் ராகுல் களமிறங்காத பட்சத்தில், லக்னோ அணியின் கேப்டனாக க்ருனால் பாண்டியா செயல்படுவார் என்று தெரிய வந்துள்ளது. கடந்த போட்டியில் கேஎல் ராகுல் களத்தில் இருந்து வெளியேறிய போது, க்ருனால் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார்.

இதனால் சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் க்ருனால் பாண்டியாவே கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இரு வேறு ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் சகோதரர்கள் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா - க்ருனால் பாண்டியா சகோதர்கள் பெறுவார்கள். அதேபோல் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.