கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி வீரர்கள் எந்த மைதானத்திற்கு சென்றாலும், ரசிகர்கள் அவர்களை நோக்கி "விராட் கோலி" பெயரால் கோஷம் எழுப்புவதை தொடர்ந்து வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இரு போட்டியில், ஒன்றில் லக்னோ அணியும், மற்றொன்றில் பெங்களூரு அணியும் வென்றன. அதில் முதலில் அடியை அடித்த லக்னோ அணி பெங்களூரு மைதானத்தில் ஆக்ரோஷமாக கொண்டாடியது. ஆனால் பதிலடி அடிக்க காத்திருந்த விராட் கோலி, லக்னோ மைதானத்தில் ஒற்றை ஆளாக சேட்டையை கொடுத்தார். இன்னும் சொல்லப் போனால் விராட் கோலி உள்ளே இருந்த பீஸ்ட் வெளியில் வந்தது என்று கூறலாம்.

அந்தப் போட்டிக்கு பின் மைதானத்திலேயே கவுதம் கம்பீர், நவீன் உல் ஹக் உள்ளிட்டோர் விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்டனர். அந்த மோதல் அன்றுடன் முடியாமல் சமூக வலைதளம் வாயிலாகவும் தொடர்ந்து வருகிறது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்களை விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்ட, விராட் கோலி டக் அவுட்டானதை நவீன் உல் ஹக் மாம்பழத்துடன் கொண்டாட என்று மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் லக்னோ அணி விராட் கோலியின் ரசிகர்களால் புதிய பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடிய போது, ரசிகர்கள் விராட் கோலி.. விராட் கோலி என்று கோஷம் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் லக்னோ அணியின் ஓய்வறையை நோக்கி ரசிகர்கள் கோஷம் எழுப்பியதால் கவுதம் கம்பீர் கோபமடைந்தார். இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடி வருகிறது.
அதில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது, 2வது ஓவரை வீச நவீன் உல் ஹக் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசப்பட்ட, கேகேஆர் அணியின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக "விராட் கோலி.. விராட் கோலி" என்று கோஷமிட தொடங்கினார். ஒரு கட்டத்தில் ஈடன் கார்டன்ஸ் மைதானமே விராட் கோலியின் பெயரால் கோஷமிட்டது. இது லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.