மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி சார்பாக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரனை தவிர்த்து 9 பேர் பந்துவீசியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற ஷிகர் தவான், பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை குவித்தது.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை லக்னோ அணி பதிவு செய்தது. இதனால் அசாத்தியம் நிகழ்ந்தால் மட்டுமே பஞ்சாப் அணியால் வெற்றிபெற முடியும் என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள், வெற்றியோ தோல்வியோ சண்ட செய்யனும் என்ற வகையில், தோல்வியை தவிர்க்க அதிரடியாக ஆடினர்.
இந்த நிலையில் பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் நடக்காத ஒரு செயலை செய்து முடித்துள்ளார். அதாவது விக்கெட் கீப்பர் மற்றும் தன்னை தவிர்த்து 9 பந்துவீச்சாளர்களை கேஎல் ராகுல் பயன்படுத்தியுள்ளார். அதில் கைல் மேயர்ஸ் ஒரு ஓவரை மட்டுமே வீசிவிட்டு வெளியேற, அவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்தார்.
கிட்டத்தட்ட ஸ்டாய்னிஸ், கைல் மேயர்ஸ், ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், ஆவேஷ் கான், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னாய், க்ருனால் பாண்டியா ஆகிய 9 பேரை பந்துவீச்சாளர்களாக கேஎல் ராகுல் பயன்படுத்தியுள்ளார். அதில் ஸ்டாய்னிஸ் காயம் காரணமாக பந்துவீச்சின் போது வெளியேறியதால் மட்டும், ஆயுஷ் பதோனி ஒரு பந்தை மட்டும் வீசினார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய இரண்டாவது கேப்டன் என்ற பெருமையையும் லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் பெற்றுள்ளார். இதற்கு முன் 2016ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி சார்பாக 9 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.