சென்னை: இளம் வேகப்பந்துவீச்சாளரான பதிரானாவை வலை பயிற்சியில் எதிர்கொள்வதே கடினமாக இருக்கும் என்றும், 2 சீசனில் அவரை எதிர்த்து 12 முதல் 14 பந்துகளை மட்டுமே விளையாடி இருப்பதாக சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் இளம் வீரரான பதிரானா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். நடப்பு சீசனில் பதிரானா விளையாடியுள்ள 7 போட்டிகளில் டெத் ஓவரில் மட்டும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார். வேகம், பவுன்சர், ஸ்விங், ஸ்லோயர் பந்துகள் என்று பல்வேறு வித்தைகளை வைத்துள்ள பதிரானாவை தோனி உச்சி முகர்ந்து பாராட்டி வருகிறார்.

சென்னை அணியின் தோனி அவ்வளவு எளிதாக யாரையும் பொதுவெளியில் பாராட்டியதே இல்லை. ஆனால் திறமையுள்ள வீரர்களான ரெய்னா, ஜடேஜா, ஆர்பி சிங், அஸ்வின் உள்ளிட்டோரை எந்த சூழலிலும் விட்டுக் கொடுத்ததே இல்லை. அனைத்து சூழல்களிலும் அவர்களை பாதுகாத்து வந்துள்ளார். அந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் பதிரானா. இன்னும் சொல்லப்போனால், வெளிநாட்டு வீரரான பதிரானா மீது தோனி அன்பை வெளிப்படுத்தி வருவது இந்திய ரசிகர்களை பொறாமை கொள்ள வைத்துள்ளது.
இந்த நிலையில் பதிரானாவின் பந்துவீச்சு குறித்து சென்னை அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார். அதில், பதிரானாவுக்கு சென்னை அணியுடன் இது 2வது சீசன். கடந்த சீசனிலேயே சென்னை அணிக்காக களமிறங்கினார். பதிரானா பந்துவீச்சு வித்தியாசமாக இருப்பதால் அவரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. 2 சீசன்களில் அவரை வலைபயிற்சியின் போது 10 முதல் 12 பந்துகளை தான் எதிர்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் சென்னை அணியின் மற்றொரு தொடக்க வீரரான டேவன் கான்வே இதுவரை பதிரானாவை வலைபயிற்சியில் எதிர்கொண்டதே இல்லை என்று தெரிய வந்துள்ளது. நேற்றைய ஆட்டம் முடிந்த பின் மும்பை அணியின் இளம் வீரரான நேஹல் வதேராவும், பதிரானாவை எதிர்கொள்வது சிரமமாக இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பதிரானாவின் பந்துவீச்சு அவரது குருவான மலிங்காவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.