அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு குஜராத் - சென்னை அணிகள் முன்னேறியுள்ளன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் இன்று இரவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று காலை முதலே அகமதாபாத்தில் மழை பெய்யாததால், ரசிகர்கள் உற்சாகத்துடன் மைதானத்திற்கு வர தொடங்கினர்.

இதையடுத்து பாலிவுட் பாடகர் கிங் ரசிகர்களுக்காக சில பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் சென்னை அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற பின் தோனி பேசுகையில், நேற்றைய நாளில் நாங்கள் ஓய்வறையில் தான் இருந்தோம்.
ஆனால் ரசிகர்கள் தான் அதிக கஷ்டங்களை அனுபவித்தார்கள். இன்று அவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். ஆடுகளம் நீண்ட நாட்களாக கவர்ஸ்-க்கு அடியில் தான் இருக்கிறது. ஆனால் இந்தத் தொடரில் பிட்சில் சீராக இருந்துள்ளது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடப் போவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தொடர்களின் இறுதிப்போட்டியில் 20 ஓவர்கள் முழுமையாக ஆடுவதே சரியானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்களும் பந்துவீசவே விரும்பினோம். ஆனால் மனம் பேட்டிங் செய்ய விரும்புகிறது. அதனால் டாஸ் தோற்றதில் எந்த கவலையும் இல்லை. வானிலை நமது கைகளில் இல்லை. எந்த அணி சிறப்பாக ஆடுகிறதோ, அந்த அணியே கோப்பையை வெல்லும். இந்த ஆடுகளம் நிச்சயம் பிளாட் டிராக் தான் என்று தெரிவித்துள்ளார்.

சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அஹ்மத், முகமது ஷமி
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹர், பதிராணா, துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா