பெங்களூரு: நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா அணி, முதல்முறையாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழக்காமல் அதிரடியாக விளையாடி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் மோதிய முந்தைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூரின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இன்றையப் போட்டியில் ஆர்சிபி அணி தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கேகேஆர் அணி சார்பாக அதிரடி வீரர் ஜேசன் ராய் - ஜெகதீசன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் 2 ஓவர்களில் நிதானம் காட்டிய கொல்கத்தா அணி, 3வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கியது. ஜெகதீசன் விக்கெட் காப்பாற்ற நிதானம் காட்டினாலும், ஜேசன் ராய் கவலையின்றி விளாசி தள்ளினார்.
ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி, சிக்சர் என்று பறந்துகொண்டே இருந்தது. 5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 41 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஷாபாஸ் அஹ்மத் வீசிய 6வது ஓவரை குறி வைத்து ஜேசன் ராய் அட்டாக் செய்தார். அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 4 சிக்சர்களை அபாரமாக விளாசி அசத்தினார். இதன் மூலம் கொல்கத்தா அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா அணி, முதல்முறையாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழக்காமல் விளையாடியுள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக ஆடினாலும் சில விக்கெட்டுகளை கொல்கத்தா அணி இழந்து வந்தது. இந்த நிலையில் ஜேசன் ராயின் சிறப்பாக ஆட்டத்தால் கொல்கத்தா அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. சிறப்பாக ஆடிய ராய், 22 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.