கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் மூலம் 100வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ரஷித் கான், தனது இரண்டாவது மோசமான பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக குர்பாஸ் 81 ரன்கள் விளாசினார்.

இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம் ரஷித் கான் ஐபிஎல் தொடரில் 100வது போட்டியில் விளையாடிய பெருமையை பெற்றார். கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ரஷித் கான் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதனால் 100வது போட்டியில் மீண்டும் கொல்கத்தா அணியுடன் ரஷித் கான் களமிறங்குவதால், அவரது பந்துவீச்சு மிரட்டலாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 4 ஓவர்கள் வீசிய ரஷித் கான், விக்கெட் வீழ்த்தாமல் 54 ரன்களை விட்டுக் கொடுத்தார். இது ரஷித் கானின் இரண்டாவது மோசமான பந்துவீச்சாகும். இதற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் 55 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். வழக்கமாக 7 எகனாமியில் பந்துவீசும் ரஷித் கானின் பந்துகளில், விக்கெட் கொடுக்காமல் ரன்கள் சேர்ப்பதே தலைவலியாக அமையும். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரின் ரஷித் கானின் எகனாமி 8க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இன்றையப் போட்டியில் கேகேஆர் அணியின் குர்பாஸ் மட்டும் ரஷித் கானுக்கு எதிராக 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என்று மொத்தமாக 30 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் கடைசி நேரத்தில் வந்த அதிரடி வீரர் ரஸ்ஸல், 2 சிக்சர்களை விளாசி ரஷித் கானுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், இன்றையப் போட்டியில் ரஷித் கான் வெறும் 3 டாட் பால்களை மட்டுமே வீசியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.