சென்னை: சென்னை அணிக்கு எதிரான முதல் குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் குவாலிஃபயர் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், பனிப்பழிவு அதிகமிருக்கும் என்பதால் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறோம். அதேபோல் சேஸிங்கில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தெரிய வரும். ஆடுகளம் மற்றும் விக்கெட்டுக்கு ஏற்றபடி ஆடும் திறன் எங்கள் அணிக்கு இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் யாஷ் தயாளுக்கு பதிலாக தர்ஷன் நலகண்டே சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
பின்னர் தோனி பேசுகையில், நாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஏனென்றால் குஜராத் அணி சேஸிங்கில் சிறந்தவர்கள். இந்த ஆடுகளத்தில் அதிகமாக விளையாடி இருக்கிறோம். கடந்தப் போட்டியிலேயே அதிகளவில் பனிப்பொழிவு இருந்தது. கடலும் அருகில் இருப்பதால், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. சென்னை அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
குஜராத் அணி விவரம்: சுப்மன் கில், சாஹா, ஹர்திக் பாண்டியா, ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா, தர்ஷன் நலகண்டே, மோகித் சர்மா, நூர் அஹ்மத், முகமது ஷமி
சென்னை அணி விவரம்: ருதுராஜ் கெய்க்வாய், டெவன் கான்வே, ரஹானே, ராயுடு, சிவம் துபே, மொயின் அலி, ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா