மும்பை: மும்பை அணியின் இளம் வீரர் ஹிருத்திக் ஷோக்கின் - கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஷோக்கின் பந்துவீச்சில் நிதிஷ் ராணா ஆட்டமிழந்து வெளியேறிய போது, இருவரும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர்.
16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் வயிறு வலி காரணமாக ரோகித் சர்மா விலக, கேப்டன்சி பொறுப்பை சூர்யகுமார் யாதவ் ஏற்றுள்ளார். இந்த நிலையில் டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் டூவன் யான்சன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பாக ஜெகதீசன் - குர்பாச் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தமிழக வீரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். பவர் பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ் ஐயர், அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டர்களை விளாசி தள்ளினார். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இந்த நிலையில் கேகேஆர் அணியின் மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ், 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேகேஆர் அணியின் நிதிஷ் ராணா பேட்டிங் செய்ய களமிறங்கினார். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடியதால், அதே ஃபார்மை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ் ராணா தொடக்கத்தில் நிதானம் காட்டினார். களத்தில் இரு இடதுகை பந்துவீச்சாளர்கள் ஆடியதால், மும்பை அணி ஹிருத்திக் ஷோக்கினை அட்டாக்கில் கொண்டு வந்தது.
அப்போது நிதிஷ் ராணா பிரஷரை குறைப்பதற்காக ஷோக்கின் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் ராமன்தீப் சிங் கேட்ச் பிடித்தார். இதனால் நிதிஷ் ராணா 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார். களத்தில் இருந்து வெளியேறிய போது, ஹிருத்திக் ஷோக்கின் சில வார்த்தைகளை ராணாவை பார்த்து கூறினார். இதனால் கடுப்பான ராணா, உடனே ஷோக்கினுடன் சண்டைக்கு சென்றார். இரு வீரர்களுக்கு இடையே வார்த்தை போர் வர, உடனே உள்ளே புகுந்த சூர்யகுமார் யாதவ் ராணாவை கட்டுப்படுத்தி ஓய்வறைக்கு அனுப்பி வைத்தார்.
நிதிஷ் ராணா - ஷோக்கின் இருவரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஆடி வருகின்றனர். இருவருக்குள்ளும் அப்போதிருந்தே பிரச்சனை இருந்து வருகிறது. இருவரும் டெல்லி அணிக்காக பேட்டிங் செய்த போது கூட பேசிக் கொள்ளாமல் இருந்தனர். தற்போது ஐபிஎல் தொடரிலும் இருவரும் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.