ஐதராபாத்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியால் ரூ.13.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஹாரி ப்ரூக் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே அதிக விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் 9 போட்டிகளில் விளையாடி வெரும் 163 ரன்களை மட்டுமே ஹாரி ப்ரூக் சேர்த்துள்ளார்.
ஐதராபாத் அணியால் ரூ.13.25 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து வாங்கப்பட்டவர் ஹாரி ப்ரூக். இதனால் ஹாரி ப்ரூக் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய முதல் 3 போட்டிகளில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். குறிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் களத்திலேயே நடனமாடியது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 55 பந்துகளில் சதம் விளாசி தனது திறமையை நிரூபித்தார். அதன்பின்னர் ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று ரசிகர்கள் கருதிய நிலையில், அனைவரையும் ஏமாற்றினார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரி ப்ரூக் வெறும் 163 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறியதால் ஹாரி ப்ரூக் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார். பின்னர் தொடக்க வீரராக சொதப்பியதால், ஹாரி ப்ரூக்கிற்கு பிடித்த பேட்டிங் இடமான 5வது இடத்தில் களமிறக்கப்பட்டார். ஆனால் எந்த இடத்தில் களமிறங்கினாலும் ஹாரி ப்ரூக் ரன்களை சேர்க்கவே இல்லை. கடந்த முறை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டான ஹாரி ப்ரூக், ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
மிடில் ஆர்டரில் இவரது மோசமான ஆட்டத்தால் ஐதராபாத் அணிக்கு அதிகமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. சதம் விளாசிய பின் இந்திய ரசிகர்களின் வாயை அடைத்துவிட்டேன் என்று மகிழ்ச்சியாக பேசிய அவர், அதன் பின்னர் ஒரு போட்டியில் கூட சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.