சென்னை: மைதானத்தில் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரை சொல்லி கோஷம் எழுப்புவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று லக்னோ அணியின் நவீன் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான இளம் வீரராக உருவெடுத்துள்ளார் நவீன் உல் ஹக். விராட் கோலியுடனான மோதல், கேஎல் ராகுலின் பேச்சை கண்டுகொள்ளாதது, ரசிகர்களை பார்த்து "சைலன்ஸ்" சிக்னல், மாம்பழங்களுடனான கொண்டாட்டம், கேஎல் ராகுல் ஸ்டைலில் கொண்டாட்டம் என்று ரசிகர்கள் மறக்கவே முடியாத வகையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார். இதனால் மும்பை அணியிடம் அடைந்த தோல்விக்கு லக்னோ அணியை ரசிகர்கள், Sweet Mangoes என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு பின் லக்னோ அணியின் நவீன் உல் ஹக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மைதானத்தில் ரசிகர்கள் விராட் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்புவது பற்றிய கேள்விக்கு, விராட் கோலி பெயரை சொல்லி கோஷம் எழுப்புவது எனக்கு பிடித்திருக்கிறது. விராட் கோலி மட்டுமல்லாமல் எந்த வீரரின் பெயரை சொல்லி கோஷம் எழுப்பினாலும் எனக்கு பிடிக்கும். அந்த கோஷம், என் அணிக்காக நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுக்கும்.
களத்தில் இருக்கும் போது பெரும்பாலும் வெளியில் இருந்து சத்தங்களை பற்றி கவலைக்கொள்ள மாட்டோம். எப்போது சூழலை பற்றி தான் சிந்தனை இருக்கும். அதனால் ரசிகர்கள் யார் பெயரை சொல்லி கோஷம் எழுப்பினாலும், என்னை பாதிக்கப்போவதில்லை. அதேபோல் விளையாட்டில் இதனை கண்டுகொள்ள தேவையில்லை. நாம் சரியாக விளையாடாத போது நம்மை ரசிகர்கள் விமர்சிப்பார்கள். அதேபோல் சிறப்பாக விளையாடினால், நமது பெயரை சொல்லி கோஷம் எழுப்புவார்கள். இது விளையாட்டின் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கம்பீர் பற்றிய கேள்விக்கு, அணியில் உள்ள வீரர்களை ஆலோசகரோ, பயிற்சியாளரோ அல்லது கேப்டனோ தான் பாதுகாக்க வேண்டும். நான் எனது அணியினருக்கு நிற்கும் போது, மற்றவர்கள் எனக்காக நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். கம்பீரை இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர். இந்திய கிரிக்கெட் அணிக்காக ஏராளமானவற்றை செய்திருக்கிறார். அவர் மீது பெரும் மரியாதை உள்ளது. அவரிடம் இருந்து அதிகமாக கற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.