கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணியும், ஆர்சிபி அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசியது. கடைசியாக நடைபெற்ற 10 போட்டிகளில் டாஸ் வென்று பந்துவீசிய அணி 7 முறை வென்று இருப்பதே இதற்கு காரணம்.
இன்றைய ஆட்டம் ஆண்டிரு ரஸிலுக்கு 100வது போட்டியாகும். சுனில் நரைனுக்கு 150வது போட்டியாகும், கிங் கோலிக்கு இன்றைய ஆட்டம் 225வது ஐபிஎல் போட்டியாகும். இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இன்றைய போட்டியை ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் இன்றைய ஆட்டம் ஒருதலைப்பட்சமாக போட்டியே இல்லாமல் முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களிலும், மந்தீப் சிங் டக் அவுட்டாகியும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் நிதிஷ் ரானா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் தொடக்க வீரர் குர்பாஷ் பொறுப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.
ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த சர்துல் தாக்கூர், திடீரென்று பேய் ஆட்டம் ஆடினார். இதனை கொஞ்சம் கூட ஆர்சிபி வீரர்கள் எதிர்பார்க்காத நிலையில் 20 பந்துகளில் எல்லாம் ஷர்துல் அரைசதம் கடந்தார். மறுபுறம் ரிங்கு சிங் அதிரடி காட்ட இந்த ஜோடி 103 ரன்கள் சேர்த்தது.
ரிங்கு சிங் 46 ரன்களும், சர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்களும் விளாச, கொல்கத்தா அணி 204 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி, தங்களது உண்மையான பார்மை வெளிப்படுத்தினார்கள். ஆம் அதாவது சொதப்பினார்கள்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 21 ரன்களிலும்,டுபிளசிஸ் 23 ரன்களும், மைக்கேல் பிராஸ்வெல் 19 ரன்களும் சேர்த்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆர்சிபி அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்வெல் 5 ரன்களில் வெளியேறி அந்த அணி ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தார்.
ஷாபாஸ் 1 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 9 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். டேவிட் வில்லி மட்டும் போராட ஆர்சிபி அணி 123 ரன்களில் சுருண்டது. கொல்கத்தா அணியின் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, அறிமுக வீரர் சுயாஷ் சர்மா தங்களுக்குள் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.