கொல்கத்தா: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்த்து நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். கேகேஆர் அணியில் ஜேசன் ராய், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு குர்பாஸ், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக மைதானத்தில் அதிக ஈரப்பதம் இருந்ததால், ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேகேஆர் அணி சார்பாக குர்பாஸ் - ஜெகதீசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் நிதானம் காட்டிய நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஜெகதீசன் அசத்தினார். இருப்பினும் முகமது ஷமி பந்துவீசில் 19 ரன்கள் எடுத்து ஜெகதீசன் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக குர்பாஸ் - ஷர்துல் தாக்கூர் கூட்டணி சேர்ந்தது. ஷர்துல் தாக்கூரை ஒருபக்கம் நிறுத்திவிட்டு, ஆட்டத்தை குர்பாஸ் கையில் எடுத்துக் கொண்டார். ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் இரு சிக்சர்களை பறக்கவிட, ஷமி ஓவரில் பவுண்டரியை அடித்து மிரட்டினார். இதனிடையே ஷர்துல் தாக்கூரும் ஆட்டமிழந்தார். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடி காட்டிய குர்பாஸ், ரஷித் பந்தையும் விட்டு வைக்கவில்லை. அவரது பந்திலேயே சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து விளாசினார்.

ஆஃப்கானிஸ்தான் வீரரான ரஷித் கானை, மற்றொரு ஆஃப்கானிஸ்தான் அணி வீரரான குர்பாஸ் வெளுத்து வாங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டிய குர்பாஸ், 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். கொல்கத்தா அணிக்காக கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஜேசன் ராய் இல்லாததால், குர்பாஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் ஜேசன் ராய் தாக்கத்தை குர்பாஸ் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.