கொல்கத்தா: 16வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீண்டு வரும் எண்ணத்துடன் சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது.
6 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா அணி ஷர்துல் தாகூர் மற்றும் ரிங்கு சிங்கின் தனி அதிரடி காரணமாகவே இரு வெற்றிகளை பெற்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட ஒரு அணியாக இணைந்து சிறப்பாக ஆடவில்லை. விக்கெட் கீப்பர்களான குர்பாஸ், ஜெகதீசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகிய மூவரும் ஃபார்ம் அவுட்டில் இருப்பதால், இன்றையப் போட்டியில் யார் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங்கை கடந்து வேறு எந்த பேட்ஸ்மேன்கள் இன்றையப் போட்டியில் அணிக்கு வலு சேர்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கேகேஆர் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் ஒருங்கிணைந்த ஆட்டத்தின் மூலம் அபாரமான வெற்றிகளை பெற்று வருகிறது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனமாக காணப்பட்டாலும், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், பதிராணா ஆகியோர் ஒவ்வொரு போட்டியிலும் முதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதுவரை இந்த இரு அணிகள் நேருக்கு நேர் ஆடியுள்ள 26 போட்டிகளில் 17 போட்டிகளில் சென்னை அணியும், 9 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றிபெற்றுள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இரு போட்டிகளிலும் அதிகளவில் ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இன்றைய ஆட்டத்திலும் அதிக ரன்கள் சேர்க்கப்படவே வாய்ப்புகள் அதிகம். அதேபோல் 2வது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு வரும் என்பதால், டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
இரு அணிகளிலும் தரமான ஸ்பின்னர்கள் இருப்பதோடு, வேகப்பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். சென்னை அணியில் இம்பேக்ட் பிளேயராக சுழற்பந்துவீச்சாளரை ஆட வைக்க வாய்ப்புகள் உள்ளது. கொல்கத்தா அணி சொந்த மண்ணில் களமிறங்குவதால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று இரவு நடக்கவுள்ள ஆட்டத்தில் பரபரப்புக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.