பெங்களூரு: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றிபெற 201 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி தரப்பில் ஜேசன் ராய் 56 ரன்களும், நிதிஷ் ராணா 48 ரன்களும் குவித்தனர்.
ஐபிஎல் தொடரின் 36வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கேகேஆர் அணி சார்பாக அதிரடி வீரர் ஜேசன் ராய் - ஜெகதீசன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

ஜேசன் ராய் அதிரடி காரணமாக கொல்கத்தா அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது. ஒருபக்கம் ஜேசன் ராய் அதிரடியாக ஆட, இன்னொரு பக்கம் ஜெகதீசன் ரன்கள் சேர்க்க முடியாமல் தடவிக் கொண்டு இருந்தார். ஆனால் ஜேசன் ராய் 22 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஆனால் பவர் பிளே ஓவர்களுக்கு பின் கொல்கத்தா அணியின் ரன் ரேட்டும் குறைந்தது. இதனால் சிக்சர் அடிக்க முயன்று ஜெகதீசன் 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதே ஓவரில் ஜேசன் ராயும் 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி சிக்கலில் சிக்கியது. பின்னர் வெங்கடேஷ் ஐயர் - கேப்டன் ராணா இணை சேர்ந்தது. இருவரும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அதேபோல் ராணா கொடுத்த கேட்ச்களை ஆர்சிபி அணியின் சிராஜ் மற்றும் ஹர்சல் படேல் கோட்டைவிட்டனர். இதனால் கிடைத்த வாய்ப்பில் அதிரடியாக ஆடிய ராணா 21 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். பின்னர் வெங்கடேஷ் ஐயரும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் கொல்கத்தா அணி 18 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின்னர் ஃபினிஷிங் பொறுப்பு ரிங்கு சிங் - ரஸ்ஸல் கைகளில் கொடுக்கப்பட்டது. 19வது ஓவரை வீச சிராஜ் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்திகளில் 6,4,4 என்று ரிங்கு சிங் விளாசி அசத்தினார். பின்னர் ஒரு ரன் எடுத்து எதிர்முனைக்கு செல்ல, கடைசி பந்தில் ரஸ்ஸல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் கடைசி ஓவரை வீச ஹர்சல் படேல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் டேவிட் வீஸா இரு இமாலய சிக்சர்களை விளாசி கொல்கத்தா அணி 200 ரன்களை எட்ட காரணமாக அமைந்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை எட்டியது. பெங்களூரு அணி சார்பாக ஹசரங்கா மற்றும் விஜய்குமார் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.