கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெறுவதற்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்த்து நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து மழை காரணமாக மைதானத்தில் அதிக ஈரப்பதம் இருந்ததால், ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேகேஆர் அணி சார்பாக குர்பாஸ் - ஜெகதீசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் நிதானம் காட்டிய நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஜெகதீசன் அசத்தினார். இருப்பினும் முகமது ஷமி பந்துவீசில் 19 ரன்கள் எடுத்து ஜெகதீசன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷர்துல் தாக்கூரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடி காட்டிய குர்பாஸ், ரஷித் பந்தையும் விட்டு வைக்கவில்லை.
ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் என்று விளாசியதால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 61 ரன்களை குவித்தது. பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் நிதானம் காட்ட, குர்பாஸ் கியரை அடுத்த கட்டத்திற்கு மாற்றினார். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனிடையே வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் நிதிஷ் ராணாவும் 4 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் குர்பாஸ் அதிரடியை மட்டும் நிறுத்தவே இல்லை. இதனால் 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
குஜராத் அணியின் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், நூர் அஹ்மத் என்று அனைவரின் பந்துவீச்சிலும் குர்பாஸ் சிக்சர்களை விளாசி அசத்தினார். ஆனால் மறுபக்கம் நின்றிருந்த ரிங்கு சிங்கால் அதிரடியாக ஆட முடியவில்லை. இதனிடையே சிறப்பாக ஆடிய குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரிங்கு சிங்கும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 18 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.
கடைசி இரு ஓவர்களில் ரஸ்ஸலின் அதிரடி காரணமாக கொல்கத்தா அணி 23 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. கடைசி பந்தில் ஆட்டமிழந்த ரஸ்ஸல், 19 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.