ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி சார்பாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து இரண்டாவது பேட்டிங் செய்த சென்னை அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் டெவான் கான்வே 77 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக சென்னை அணியின் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் இருமுறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். ஏற்கனவே மும்பை அணிக்கு எதிராக போட்டியில் ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இதுகுறித்து ஜடேஜா பேசுகையில், ஒவ்வொரு முறையும் சென்னை சேப்பாக்கத்தின் பிட்சினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் பிட்ச் நிச்சயம் திரும்பும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தப் போட்டியை பொறுத்தவரை ஃபுல் லென்த்தில் வீச வேண்டாம் என்பது மட்டுமே மனதிற்குள் என் திட்டமாக இருந்தது. அதற்கேற்ப பந்துவீசினேன். அதேபோல் விக்கெட் டூ விக்கெட் திட்டத்தை செயல்படுத்தினேன். அதுவும் பலனாக கிடைத்துள்ளது. சென்னை அணியின் ரசிகர்கள் வெற்றி தோல்வியை கடந்து எங்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடியவர்கள். அந்த ஆதரவு எங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்தார்.
ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, ராகுல் த்ரிப்பாட்டி மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய மூவரையும் ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய ஜடேஜா, 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐதராபாத் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது.