லக்னோ: லக்னோ அணியின் கேப்டனாக க்ருனால் பாண்டியா களமிறங்கிய முதல் போட்டியிலேயே, தீபக் ஹூடாவை அணியில் இருந்து நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பங்கேற்கவில்லை. இதனால் லக்னோ அணியின் கேப்டன் பொறுப்பை க்ருனால் பாண்டியா ஏற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் முதல்முறையாக க்ருனால் பாண்டியா கேப்டனாக களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் லக்னோ அணியில் தீபக் ஹூடா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு பதிலாக மனன் வோரா மற்றும் கரண் சர்மா ஆகியோர் களமிறக்கப்பட்டனர். கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சீனியர் வீரரான தீபக் ஹூடாவை அணியில் இருந்து க்ருனால் பாண்டியாவை நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் பரோடா அணிக்காக தீபக் ஹூடா - க்ருனால் பாண்டியா ஒன்றாக விளையாடிய போது இருவரும் மோதிக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பரோடா கிரிக்கெட் நிர்வாகத்திடம் கேப்டன் க்ருனால் பாண்டியா மீது புகார் கடிதத்தையும் தீபக் ஹூடா அளித்தார். அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணிக்காக தீபக் ஹூடா விளையாடிய போது அபாரமாக ஆடி அரைசதம் அடித்த போதும், க்ருனால் பாண்டியாவை பார்த்து செய்கை செய்தார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி மோதல் தொடர்ந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு புதிதாக லக்னோ அணி ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த அணியில் க்ருனால் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதுகுறித்து இருவர் தரப்பிலும், சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் க்ருனால் பாண்டியா கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில் தீபக் ஹூடாவை நீக்கியுள்ளார்.
இருப்பினும் தீபக் ஹூடா நீக்கப்பட்டதற்கு அவரின் பேட்டிங்கே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் சொல்லிக் கொள்ளும்படியாக தீபக் ஹூடா ஒரு இன்னிங்ஸை கூட விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.