லக்னோ : ஐபிஎல் தொடரில் பல போட்டிகள் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுப் போக்காக இருந்து வருகிறது. ஆனால் சில போட்டிகள் ஏன் நடைபெறகிறது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு போட்டி தான் இன்று லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இயே நடைபெற்று உள்ளது.
இதில் லக்னோ அணியில் ஸ்டார் வீரர்கள் என்றால் கேஎல் ராகுலை தவிர வேறு யாரும் இல்லை. சரி ராகுலை பார்த்தாலும், அவரோ ரசிகர்களுக்கு தாலாட்டு பாடும் அளவு விளையாடுகிறார். ஏதேனும் ஆட்டத்தில் பரபரப்பாக நடந்தால் தானே பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

இன்றைய ஆட்டத்தில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என அனைத்தும் ரொம்ப போராக இருந்தது. குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் ராகுல் பொறுப்பாக விளையாடுகிறேன் என்ற பெயரில் கட்டையை போட, மற்ற வீரர்களும் வந்த வேகத்தில் திரும்பினார்கள். லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இதில் ராகுல் மட்டும் 74 ரன்களை அடித்தார்.

இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். சரி, ஆடுகளமாவது ரன்கவிப்புக்கு சாதகமாக இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு இருப்பது போல் செயல்பட்டது. பஞ்சாப் பந்துவீச்சில் சாம் கரண் 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இது போன்ற மொக்கை போட்டிகளை பார்க்கும் போது அணியின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பிசிசிஐ தவறு செய்துவிட்டது போல் தோன்றுகிறது.