லக்னோ: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் வலிமையான லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. கடந்த முறை இந்த இரு அணிகள் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய போது, கடைசி பந்தில் லக்னோ அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து டூ பிளஸிஸ் - விராட் கோலி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லக்னோ அணி சார்பாக முதல் ஓவரிலேயே க்ருனால் பாண்டியாவை அட்டாக்கில் கொண்டு வந்தது. இதன் மூலம் பிட்ச் ஸ்பின்னிற்கு சாதகமாக இருப்பது தெரிந்தது. முதல் 6 ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து ரவி பிஷ்னாய் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் அடுத்தடுத்து அட்டாக் செய்தனர்.
அதில் 9வது ஓவரில் விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அனுஜ் ராவத் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் மீண்டும் ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஆர்சிபி அணி 12.4 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே எடுத்து சிக்கலில் சிக்கியது.
4 ஓவர்கள் வீசிய லக்னோ அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ரவி பிஷ்னாய் 5.2 எகனாமியில் மட்டுமே பந்துவீசியுள்ளார். ரவி பிஷ்னாயின் பந்துவீச்சால் ஆர்சிபி அணி டாப் ஆர்டர் மொத்தமாக கலங்கி போனது. இதனால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.