லக்னோ: டி20 கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை குவித்த அதிவேக இந்திய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குஜராத் அணி சார்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 ரன்கள் சேர்த்தார்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணி சார்பாக கேப்டன் கே.எல்.ராகுல் - கைல் மேயர்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. குஜராத் அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட கே.எல்.ராகுல், ஒரு ரன் கூட அடிக்கவில்லை. ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கே.எல்.ராகுல் போல்ட் ஓவரில் எந்த ரன்களும் சேர்க்கவில்லை.
இதன் மூலம் தொடர்ச்சியாக இரு போட்டிகளில் முதல் ஓவரை எதிர்கொண்டு ஒரு ரன் கூட சேர்க்காத வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றார். ஆனால் முதல் ஓவருக்கு பின் கே.எல்.ராகுல் அதிரடிக்கு திரும்பினார். முதல் ஓவருக்கு பின் கே.எல்.ராகுல் எதிர்கொண்ட 11 பந்துகளில் 6 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.

இவருக்கு முன் விராட் கோலி 212 இன்னிங்ஸ்களிலும், ஷிகர் தவான் 246 இன்னிங்ஸ்களிலும், சுரேஷ் ரெய்னா 251 இன்னிங்ஸ்களிலும், ரோகித் சர்மா 258 இன்னிங்ஸ்களிலும், ராபின் உத்தப்பா 271 இன்னிங்ஸ்களிலும் 7 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். அதேபோல் கே.எல்.ராகுல் 197 இன்னிங்ஸ்களில் 7 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். கே.எல்.ராகுல் மீது ஸ்ட்ரைக் ரேட் விமர்சனங்கள் அதிகரித்திருந்த நிலையில், இப்படியொரு சாதனையை படைத்துள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.