லக்னோ: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கண்களை மூடி திறப்பதற்குள் என்னென்னமோ நடந்து முடிந்துவிட்டதாக லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் குஜராத் - லக்னோ அணிகள் ஆடின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 66 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 10 ஓவர்கள் முடிவிலேயே 80 ரன்களை குவித்தது. ஆனால் அடுத்த 10 ஓவர்களில் வெறும் 48 ரன்களை மட்டுமே எடுத்து இலக்கை எட்ட முடியாமல் லக்னோ அணி தோல்வியை சந்தித்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், குஜராத் அணி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக பந்துவீசிய மோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் கூறுகையில், எப்படி தோல்வியடைந்தோம் என்றே தெரியவில்லை. ஆனால் தோற்றுவிட்டோம். எங்கு தவறு நடந்தது என்று சரியாக கூற முடியவில்லை. ஆனால் இன்றையப் போட்டியில் 2 புள்ளிகளை நாங்கள் இழந்துவிட்டோம். அதுதான் கிரிக்கெட். எங்களின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. பேட்டிங்கிலும் சிறப்பாகவே தொடங்கினோம். சில நேரங்களில் இப்படி நடக்கும்.
7 போட்டிகள் முடிவில் 8 புள்ளிகளை எடுத்துள்ளோம். இன்றைய நாளின் முடிவில் தோல்வியின் திசையில் நிற்கிறோம். கடைசி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்து செல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. நாங்கள் ஜெயந்த் யாதவ், நூர் அஹ்மத் பந்துவீச்சின் போது சில முடிவுகளை எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் எங்களின் கைகளில் விக்கெட்டுகள் இருந்தது. குஜராத அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. சில பவுண்டரி வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்பட்ட போது, எங்கள் மீதான அழுத்தம் அதிகரித்தது. கடைசி 4 ஓவரில் ஆட்டம் மாறிவிட்டது என்று தெரிவித்தார்.