லக்னோ: இன்றைய ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து வலிமை வாய்ந்த அணியான லக்னோ அணி விளையாடவுள்ளது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாட உள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 3 வெற்றி, 2 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணியை பொறுத்தவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது.

இந்தப் போட்டி இரு அணிகளுக்கு இடையிலானது என்பதை விடவும், கேஎல் ராகுல் - சுப்மன் கில் இடையிலான ஆட்டம் என்றே கூறலாம். ஏனென்றால் இரு அணிகளுக்காகவும் ஆங்கர் இன்னிங்ஸ் ஆடி பல வெற்றிகளை இரு வீரர்களும் பெற்று கொடுத்து வருகிறார்கள். லக்னோ அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி நம்பிக்கையுடன் உள்ளது. அதேபோல் பேட்டிங்கில் கைல் மேயர்ஸ், ஸ்டாய்னிஸ், க்ருணால் பாண்டியா, பூரன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
பந்துவீச்சை பொறுத்தவரை மார்க் வுட் இல்லாத போதும் நவீன் உல் ஹக் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் இன்றையப் போட்டியிலும் அவரே களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய், யுத்விர் சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆவேஷ் கானின் தாக்கம் ஒவ்வொரு போட்டிக்கும் அதிகரித்துக் கொண்டே போகிறது. லக்னோ பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அவ்வளவு எளிதாக பேட்ஸ்மேன்கள் சிக்சர்களை விளாச முடியாது என்றே பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் குஜராத் அணியை பொறுத்தவரை சிறிய ஓய்வுக்கு பின் அந்த அணி களமிறங்க உள்ளது. கடந்த சீசனை போல் அல்லாமல் இலக்கை டிஃபெண்ட் செய்வதில் குஜராத் அணி தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. ஏற்கனவே கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளதால், குஜராத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற கட்டாயத்தில் உள்ளது. அந்த அணியில் சுப்மன் கில், சாய் சுதர்சன், சாஹா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தாலும், அவர்களின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடியாக ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி மற்றும் மோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இருப்பினும் பவர் பிளே ஓவர்களுக்கு பின் ஷமியின் சொதப்பல், மோகித் சர்மாவின் டெத் ஓவர் பவுலிங் ஆகியவை அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.