பெங்களூரு: ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளான பெங்களூரு - சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் பிட்ச் எப்படி இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.
16வது ஐபிஎல் சீசனில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு நடைபெறுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், இரு அணி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பெங்களூரு மைதானத்தில் பவுண்டரி எல்லை குறைவு என்பதோடு, பேட்டிங்கிற்கு சாதகமாக மட்டுமே செயல்படும் பிட்ச் என்பது தான் காரணம்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 2 தோல்வி என்று சரிசமமாக 4 புள்ளிகளுடன் இருக்கின்றனர். இதனால் எந்த அணியை யார் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு அணி பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், பந்துவீச்சில் கடந்தப் போட்டியில் மட்டுமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் சென்னை அணி வீரர்களின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ள 30 போட்டிகளில் 19 போட்டிகளில் சென்னை அணியும், 10 போட்டிகளில் ஆர்சிபி அணியும் வெற்றிபெற்றுள்ளது.

சின்னசாமி மைதானம் குறுகிய மைதானம் என்பதால் அதிக சிக்சர்கள் விளாசப்படும். இருப்பினும் லெக் ஸ்பின்னர்களுக்கு பிட்ச் சாதகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் கரண் சர்மா மற்றும் ஹசரங்கா ஆகியோர் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். சென்னை அணியில் தீக்சனா முக்கிய வீரராக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல் பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் இருக்கும். அதனால் சிராஜ் பந்துவீச்சு ஆர்சிபி அணிக்கு முக்கியமானதாக அமையும்.
இருப்பினும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒட்டுமொத்தமாக சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 101 ஐபிஎல் போட்டிகளில் 54 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் 45 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றிபெற்றுள்ளது.
கடந்த போட்டி மாலை நேரத்தில் நடைபெற்றதால், பிட்ச்சில் பந்து சிறிது நின்று வந்தது. அதனால் 175 ஸ்கோர் போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று இரவு நேரத்தில் ஆட்டம் நடக்கவுள்ளதால், குறைந்தது 200 ரன்களாவது முதலில் பேட்டிங் செய்யும் அணி சேர்த்தால் மட்டுமே வெற்றியை பற்றி சிந்திக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.