மொஹாலி: லக்னோ அணியின் இளம் வீரர் ஆயுஷ் பதோனி மற்றும் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டன் இடையே நிகழ்ந்த ஈகோ யுத்தம் ரசிகர்களிடையே சுவாரஸ்யமாக அமைந்தது.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இதில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் களமிறங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற ஷிகர் தவான், பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, குர்னூர் ப்ரார் மற்றும் சிக்கந்தர் ராசா அணிக்கு திரும்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லக்னோ அணி தரப்பில் கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் ஓவரை அறிமுக வீரர் குர்னூர் ப்ரார் வீசினார். அந்த ஓவருக்கு பின் 2வது ஓவரில் தொடங்கிய மேயர்ஸ் அதிரடி எந்த இடத்திலும் நிற்கவே இல்லை. கேஎல் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போதும், கைல் மேயர்ஸ் பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் அரைசதத்தை விளாசினார்.
பின்னர் அவரும் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இளம் வீரர் ஆயுஷ் பதோனி - ஸ்டாய்னிஸ் இணை சேர்ந்து பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொளந்து கட்டியது. இதன் காரணமாக லக்னோ அணி 7.4 ஓவர்களிலேயே 100 ரன்களை கடந்தது. அங்கிருந்து 10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணியின் ஸ்கோர் 128ஆக உயர்ந்தது. பதோனி - ஸ்டாய்னிஸ் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் திணறினர்.
இந்த நிலையில் 14வது ஓவரை வீச பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் லிவிங்ஸ்டன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2வது பந்தில் ஆயுஷ் பதோனி ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்ற போது, லிவிங்ஸ்டன் பந்துவீசுவதை நிறுத்தினார். பின்னர் மீண்டும் லிவிங்ஸ்டன் பந்துவீச வந்த போது, ஆயுஷ் பதோனி நிறுத்தினார். இதனால் இருவருக்கு இடையிலும் களத்தில் ஈகோ யுத்தம் நிகழ்ந்தது.
இந்த ஈகோ யுத்தத்தில் யார் வெல்ல போகிறார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் லிவிங்ஸ்டன் வீசிய 2வது பந்தில் ஆயுஷ் பதோனி சிக்சர் அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த பந்திலேயே லிவிங்ஸ்டன் ஆயுஷ் பதோனியின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். இதனால் பதோனி 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சில வாரங்களுக்கு முன் ரஹானே - அஸ்வின் இடையே இதேபோல் ஈகோ யுத்தம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.