மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான மார்கோ யான்சனின் சகோதரர் டுவன் யான்சனின் செயல்பாடுகள் விமர்சனத்தை ஏற்படுத்தியுய்ள்ளது. அதேபோல் சிறப்பாக பந்துவீசி வரும் பெஹ்ரன்டார்ஃபை நீக்கியது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் மும்பை அணி சார்பாக அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சனின் சகோதரரான டுவன் யான்சன் அறிமுகமாகினர். இதனால் இவர்களின் இருவரின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். மும்பை அணி சார்பாக பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
மறுபக்கம் அர்ஜூன் டெண்டுல்கர் 2 ஓவர்கள் மட்டுமே வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதேபோல் இளம் வேகப்பந்துவீச்சாளர் டுவன் யான்சன் 4 ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்த ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பெஹ்ரன்டார்ஃபை நீக்கிவிட்டு, டூவன் யான்சன் அணியில் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டிக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் பெஹ்ரன்ஃபார்ஃப்.
ஆனால் அவருக்கு பதில் அணியில் இடம்பெற்ற யான்சன் மோசமாக ஆடியது மும்பை அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவரிடம் போதுமான ஸ்விங்கும் இல்லாமல் இருந்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் போட்டிகளில் மும்பை அணி மீண்டும் பெஹ்ரன்டார்ஃபையே சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.