தரம்சாலா: கடைசி ஓவரை ஸ்பின்னருக்கு வழங்கிய எனது முடிவே பஞ்சாப் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதில் அதிகபட்சமாக ரூஸோவ் 37 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 198 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது என்றே கூறலாம். ஆர்சிபி, மும்பை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளின் வெற்றி, தோல்விகளை கணக்கிட்டே பஞ்சாப் அணிக்காக பிளே ஆஃப் வாய்ப்பு கணக்கிடப்படும். இந்த நிலையில் டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தோல்விக்கு பின் ஷிகர் தவான் பேசுகையில், இந்த தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது. பவர் பிளே ஓவர்களை நாங்கள் சரியாக வீசவில்லை. பந்து ஸ்விங்காகிய போதே நாங்கள் சில விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க வேண்டும். கடைசி ஓவரில் திடீரென நோ-பால் வீசப்பட்ட போது, எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. லிவிங்ஸ்டன் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரை ஸ்பின்னருக்கு வழங்கிய எனது முடிவு தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
அதற்கு முன் வீசிய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததால் தான் கடைசி ஓவரை ஸ்பின்னருக்கு கொடுத்தேன். நாங்கள் திட்டமிட்டதை களத்தில் செயல்படுத்த தவறிவிட்டோம். விக்கெட்டுகள் வீழ்த்திகிறோமோ இல்லையோ, சரியான லெந்தில் பந்தை வீச வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் பவர் பிளே ஓவர்களில் 50 முதல் 60 ரன்கள் வரை விட்டுக் கொடுத்துள்ளோம். அதேபோல் பேட்டிங்கில் முதல் விக்கெட்டை 2வது ஓவரிலேயே இழந்தோம். நான் ஆட்டமிழந்ததோடு, முதல் ஓவர் மெய்டனாக அமைந்தது. அங்கேயே நாங்கள் 6 பந்துகளை இழந்துவிட்டோம் என்று வேதனையாக தெரிவித்தார்.